குவைத்தில் தாம் பணி புரிந்த இடங்களில் பல்வேறு சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், குவைத் தூதரகத்தால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அங்குள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 இலங்கை பணிப் பெண்கள் இன்று (24) நாடு திரும்பினர்.
குவைத்திலிருந்து இலங்கை திரும்பிய பணிப் பெண் ஒருவர் கருத்து வெளியிடுகையில், ‘நாம் இங்கிருந்து எதிர்பார்த்து போது நடக்கவில்லை. ஒரு மாத சம்பளத்தைப் பெற மூன்று மாதங்கள் காத்திருந்தோம். இலங்கையிலுள்ள முகவர்கள் இதற்கு பொறுப்பேற்காவிட்டால், அவர்களுக்கு பணியாற்ற இடமளிக்க வேண்டாம்.
‘அவர்கள் உரிய முறையில் எம்மைப் பற்றி ஆராய்ந்து பார்க்கவில்லை. நாம் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது அவர்கள் ஆராயந்து பார்த்திருந்தால், நாம் இவ்வாறு துன்பத்துக்குள்ளாகி வந்திருக்க மாட்டோம்.’ என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை , மற்றுமொரு பெண் கூறுகையில், ‘நாம் மிகவும் துன்பப்பட்டே குவைத்தில் இருந்தோம். பணிக்குச் சென்ற வீட்டில், தருவதாக கூறிய சம்பளத்தை தரவில்லை. முகவரிடம் கூறினோம். உதவி செய்யவில்லை. இவ்வாறாக ஏழு ஆண்டுகள் குவைத்தில் இருந்தேன். இறுதியில் அங்குள்ள தூதரகம்தான் எமக்கு உதவி செய்து, இலங்கைக்கு வர ஏற்பாடு செய்தது.’ என்று தெரிவித்துள்ளார்.