கறுப்புப் பட்டி போராட்டதில் ஈடுபடவுள்ள வடக்கு, கிழக்கு அதிபர்கள், ஆசிரியர்கள்!

நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் புதன்கிழமை (13) இடம்பெறவுள்ள அதிபர்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அதிபர்கள் கறுப்புப் பட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிருவாக முடக்கல் மற்றும் கடையடைப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில், எமது போராட்டத்தை சற்று வித்தியாசமாகக் குறித்துக் காட்டும் வகையில் கறுப்புப் பட்டியணிந்து கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தி, அன்றைய தினம் கறுப்புப் பட்டியுடனேயே கற்பித்தல் கடமைகளில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.

குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்களின் வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை எனவும் நாம் இதற்கு முன்னர் பல போராட்டங்களை முன்னெடுத்த போதும் எந்தப் பயனும் இதுவரை கிட்டவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்கள், அதிபர்களின் வேதனத்தை அதிகரித்தல், ஆசிரியர்கள் மீது செலுத்தப்படும் தேவையற்ற அழுத்தங்களை தவிர்த்தல், மொத்தத் தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6 சதவீதம் ஒதுக்குதல், ஆகிய மூன்று அம்சங்களடங்கிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்வுரும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மாணவர்களும், பெற்றோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் 8.30 மணி வரை அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் சென்று கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடி தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் கறுப்புப் பட்டியுடன் கடமையில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற் சங்கங்களையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435