கூலிப் பேச்சுவார்த்தையால்  தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

2019ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்கு, கூலித் தொடர்பான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டத் தொழிலாளர் பிரச்சினைகளும் காரணம் என 2019ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், கொழும்பு ஏலத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட தேயிலையின் அளவும், ஏற்றுமதிச் செய்யப்பட்டத் தேயிலையின் அளவும் அதிகரித்திருந்ததெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2017ஆம் ஆண்டைப் போல 2019ஆம் ஆண்டும் தேயிலை உற்பத்தியில் கீழ் நோக்கியப் போக்குக் காணப்பட்டுள்ளது. 2019இல் 300.1 மில்லியன் கிலோகிராம் தேயிலை உற்பத்திச் செய்யப்பட்டுள்ளதோடு, இது 1.3 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘கூலிப்’ பேச்சுவார்த்தைகளின் போது எழுந்த தொழிலாளர் பிரச்சினை, 2019ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஏற்பட்டிருந்த வரட்சி, நான்காம் காலாண்டில் ஏற்பட்ட பலத்த மழைவீழ்ச்சி ஆகியன தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைவதற்குக் காரணமென குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் துறையைவிட, சிறுதோட்ட உரிமையாளர்களின் தேயிலை உற்பத்தி கணிசமான அளவு அதிகரித்திருப்பதாகவும் இதற்கு தேயிலை மீள்நடுகை, நிரப்பல் நடுகை, சிறந்த வேளாண்மை நடைமுறைகளும் இதற்குக் காரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி ஏற்றுமதி விலை, 2018ஆம், 5.1 டொலர்களாகவும் 2019ஆம் ஆண்டு 4.6 டொலர்களாகவும் காணப்படுகிறது.

2018ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, ஒரு கிலோகிராம் தேயிலையின் சராசரி விலை 2019ஆம் ஆண்டு 9.1 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

தேயிலை ஏற்றுமதியால் நாட்டுக்குக் கிடைக்கும் வருவாயை அதிகரிக்க, இத்துறையின் பெறுமதி கூட்டலை மேம்படுத்துதல், களஞ்சியசாலை, பொதியிடல் வசதிகளையும் மேம்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் வரையிலான பெறுமதிச் சங்கிலி முழுவதும் தரத்தை உறுதிப்படுத்துதலும் அவசியமெனவும், உற்பத்தியாளர்களின் சொந்த நாமத்தை உருவாக்குவதனூடாக, வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுடன் நேரடி இணைப்புகளைக் கட்டியெழுப்புவதூடாக தேயிலை உற்பத்தியாளர்களுக்கான சிறந்த விலைகளையும் நிலையான சந்தையையும் உறுதிசெய்ய முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435