பாடசாலைகள் மீள்திறப்பு: அரசாங்கத்தின் தீர்மானமும் – ஆசிரியர் சங்கங்களின் நிலைப்பாடும்

ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 6 முதல் 13 வரையான தரங்களுக்கு இன்று முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.

நாட்டில் உள்ள 10,165 அரசாங்க பாடசாலைகளில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் வலையத்திற்குள் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர்ந்த 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 5,233 ஆகும்.

நாட்டில் தற்பொழுது நிலவும் சூழலுக்கு மத்தியில் அனர்த்தம் அதிகளவில் உள்ள கிழக்கு மாகாண 5 பாடசாலைகள், வடமேல் மாகாணத்தில், குருநாகல் மாவட்டத்தில் சில பாடசாலைகள், சப்ரகமுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள சில பாடசாலைகள் தவிர்ந்த சுமார் 5,100 பாடசாலைகளில் இன்று (23 ஆம் திகதி) முதல் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண வலய மற்றும் கோட்டக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சினால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 15 / 2020 என்ற சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக இதில் குறிப்பிடப்பட்ட வகையில் சுகாதார மேம்பாட்டு குழுவை முன்னிலைப்படுத்தி மிகவும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொண்டு பாடசாலைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார். நாட்டில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 500 இற்கும் குறைவான பாடசாலைகள் 77.3 சதவீதமாகும். 501 தொடக்கம் 1000 வரையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 13.6 சதவீதமாகும். இதற்கமைவாக மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கையில் 91 சதவீதம். 1000 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலையாகும் என்றும் செயலாளர் கூறினார்.

இதனால் சமூக இடைவெளி உள்ளிட்ட ஏனைய சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து பாடசாலைகளை முன்னெடுப்பதில் நடைமுறையில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையையும் அடிப்படையாகக் கொண்டு சுகாதார நடைமுறைகளை முன்னெடுப்பதற்காக நிதி உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைவாக 105.812 பில்லியன் ரூபாவை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்இ அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடியே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். எனினும், தொழிற்சங்கங்கள், அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் எந்தப்  பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலைக்கு வந்தால்இ கொவிட் பரவாது என்ற உத்தரவாதம் வழங்கப்படவில்லை. சுகாதார வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டாம் என நாங்கள் கூறவில்லை. சுகாதாரம் தொடர்பில் உரிய தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க,

அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை அரசாங்கத்தில் உள்ள சிலரே ஏற்காதுள்ளனர். அரசாங்கத்தின் இந்த அவசர தீர்மானம் காரணமாக பாடசாலை கொத்தணி உருவாகக்கூடிய அபாய நிலை உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கோ அல்லது கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணிக்கோ இதிலிருந்து தப்பிச்செல்ல முடியாது. எந்த அபாயமும் இல்லை. நீங்கள் எவ்வித அச்சமுமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பலாம் என்று நாட்டு மக்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் அவர்கள் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அவ்வாறு எதனையும் கூறவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் மேற்கொண்டதாக கூறுகின்றனர். அவர்கள் தரப்பில் உத்தரவாதம் வழங்கவேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை கல்வி சமூகத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில், 90 சதவீதமான பாடசாலைகளில் சுத்திகரிப்பு தொழிலாளர்களோ, சிற்றூழியர்களோ இல்லை. எனவே, உடனடியாக பாடசாலையை ஆரம்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில், மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவீர்ந்த ஏனைய பிரதேசங்களில் இன்று  முதல் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதற்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விசேட செயல்குழு மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனை கிடைக்கப்பெற்றிருப்பதாக செயலாளர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435