
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி செல்லும் அனைத்து தனியார் மற்றும் அரச பஸ் சேவை இன்று (24) அதிகாலை தொடக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
நாவலபிட்டி பிரதான பஸ்நிலையத்திலிருந்த கண்டிக்கான பஸ் நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாரதிகள் வேலைநிறுத்ததப் போராட்டத்தை ஆரம்பித்ததையடுத்து பஸ் சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவலப்பிட்டி, ரயில் நிலையத்திற்கு அண்மையாக கண்டி பஸ் நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கு பயணிகள் தரித்து நிற்பதற்கான வசதிகள் இல்லாமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. அவ்விடத்திற்கு நிரந்தர நிறுத்தம் அமைத்துக்கொடுக்கும் வரை பஸ் நிறுத்தத்தை நாவலபிட்டிய பிரதான பஸ் நிலையத்திற்கு மாற்றித் தருமாறு கோரியும் பிரதான பஸ் நிலையத்திற்கு கண்டி பஸ் நிறுத்தப்படும் போது அப்பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் அச்சுறுத்தப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு கோரியும் இவ்வேலைநிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பிரதான பஸ்நிலையத்தில், மத்திய மாகாணத்திற்கான வீதி போக்குவரத்து அதிகாரசபை அதிகாரி பி.ஜி காமினி தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுத் தருமாறு மத்திய மாகாண வீதி போக்குவரத்து அதிகாரசபை தலைவர் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்று ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் , சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இலங்கை பொதுப்போக்குவரத்து பஸ் சேவை டிப்போ அதிகாரி அநுர தெடங்தென்ன கருத்து தெரிவிக்கையில், நாவலப்பிட்டிய பஸ் நிலையத்தில் ஹட்டன் பஸ்கள் நிறுத்தப்படும் போது அங்கிருந்த பலர் அச்சுருத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வார்ப்பட்டாம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்விடயத்திற்கு உடனடியாக தீர்வை பெற்றுக்க்கொடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச்சபை கண்டி பிரதேச செயலக உயரதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
,