அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு விசேட அரச சேவைகள் ஆணைக்குழு

விசேட அரச சேவைகள் ஆணைக்குழுவை அமைத்து சகல அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பிலும் தீர்மானம் எடுக்கும்வரை ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடவேண்டும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் (வற்வரி) மீது நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ரயில் சாரதிகளின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவையில் நான் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன். அவர்கள் கோருவதைப் போன்று சம்பள அதிகரிப்பை வழங்கினால் அது வைத்தியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும்.

இது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவேதான் ரயில் சாரதிகள் உள்ளிட்ட முழு அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்புக் குறித்து முடிவெடுக்க சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தேன்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ளேன். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் ஆணைக்குழுவை நியமித்து அதனூடாக முழு அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்புக் குறித்த அறிக்கையைப் பெறவுள்ளோம்.

ரயில் சாரதிகளின் திடீர் வேலைநிறுத்தமானது சம்பிரதாயத்துக்கு முரணானதாக அமைந்தது. முன் அறிவித்தல் இன்றி அவர்கள் மேற்கொண்ட இந்த வேலைநிறுத்தத்தால் அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பலர் பாரிய கஷ்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அரசாங்கத்தின் சார்பில் அவர்களுக்கு கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முழு அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்பை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பூர்த்திசெய்யவுள்ளோம்.

அதுவரை பணிப்புறக்கணிப்பை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரயில்வே தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் நான் ஈடுபட்டதில்லை என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435