ஆசிரியர் சம்பள பிரச்சினை விடயங்கள் சம்பள ஆணைக்குழுவுக்கு

ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்த் தீர்வு காணும் வகையில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தொடர்பான விடயங்கள் சம்பள ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சேவையில் 2,40,000 உள்ளனர். அவர்களில் தினமும் 20,000 பேர் விடுமுறையில் செல்கின்றனர். மகப்பேற்று விடுமுறையில் 10,000 பேர் செல்வதுடன் ஏனைய விடுமுறைகளிலும் 10,000 பேர் செல்கின்றனர். பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போன்று பயிற்சியற்றவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் நிலவிய தகைமையுடையவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளமையினாலேயே தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த அரசாங்கத்திலேயே பயிற்சியற்றோர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து தற்போது 8000 பேர் வௌியேறவுள்ளனர். அவர்களை சேவையில் இணைப்பதனூடாக ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பலர் பல கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். கல்வியமைச்சின் முன்பாக ஆசிரியர்கள் போராட்டங்களையும் நடத்தினார்கள். முன்வாயிலை உடைத்துக்கொண்டு உள்நிலைய முயற்சித்தபோதே நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.

2015ம் ஆண்டு ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் 21,750 ரூபாவாகும். தற்போது படிப்படையாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் 2020ம் ஆண்டு அவர்களின் சம்பளம் 44,950 ரூபாவாகும். அது மட்டுமன்றி ஏனைய கொடுப்பனவுகளையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் உள்ள பாடசாலைகளிலும் சகல பிரிவுகளிலும் சுமார் 20,000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தேசிய பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்கள் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளோம். அவர்களுக்கான சம்பளத்தையும் வழங்க தயாராகவுள்ளோம்.

பாராளுமன்றில் கடந்தவாரம் இடம்பெற்ற கல்வியமைச்சுக்கான நிதியொதுக்கீடு குழுநிலை விவாவதத்தின் போது பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435