இலங்கை – இந்திய காங்கிரஸ் உதயம்!

1942 இல் தொண்டமானை தோற்கடித்த அசீஸ்!

மலையகப்பெருந்தோட்டப்பகுதிகளிலும் தலைநகர் கொழும்பில் வாழ்ந்த – (அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட – ஓரங்கட்டப்பட்ட ) மலையகத் தமிழர்களின் பாதுகாப்புக்கான ஓர் அரசியல் அரணாகவே இந்தியாவின் தலையீட்டுடன் 1939 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானது.

இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மக்கள் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டதால் – இவ்விவகாரத்தில் நேரில் தலையிட்டது இந்திய மத்திய (காங்கிரஸ்) அரசாங்கம்.

மகாந்தமா காந்தியும், நேருவும் தீவிரமாக செயற்பட்டு 5 நிபந்தனைகளுடன் வெற்றிகரமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கை – இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவராக லக்ஷ்மன் செட்டியார் தெரிவுசெய்யப்பட்டார். முதலாவது மாநாட்டை செப்டம்பரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக அது நடைபெறவில்லை.

எனினும், 1940 ஆம் ஆண்டு கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமானும், அமரர். கே. இராஜலிங்கவும் இணைந்து காங்கிரஸின் முதலாவது மாநாட்டை கம்பளையில் நடத்தினர். நிர்வாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது.

இதன்படி தலைவராக தொண்டமானும், பொதுச்செயலாளராக ராஜலிங்கவும் செயற்பட்டனர். காலப்போக்கில் இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது.

மிக முக்கிய தொழிற்சங்க தளபதிகளான, தொழிற்சங்க துறவி என போற்றப்படும் வெள்ளையன், வீடற்றவன் நாவல் தந்த சி.வி. வேலுபிள்ளை, அசீஸ் போன்றவர்களால் இ.தொ.கா. அரசு வேகத்தில் வளர்ச்சி கண்டது.

இலங்கை, இந்திய காங்கிரஸின் இரண்டாவது மாநாடும், இலங்கை – இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் முதலாவது மாநாடும் 1942 இல் கண்டியில் நடைபெற்றபோது இரு அமைப்புகளுக்கும் புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது.

தலைவர் பதவிக்கு அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானும், அஸிசும் போட்டியிட்டனர். வாக்கெடுப்பின்மூலமே தலைவர் தெரிவுசெய்யப்பட்டார்.

அஸீசுக்கு ஆதரவாக 31 பேரும், தொண்டமானுக்கு ஆதரவாக 19 பேரும் வாக்களித்தனர். இதன்படி மேலதிக 12 வாக்குகளால் அஸீஸ் தலைவரானார்.
வாக்கெடுப்பு முடிவு தொண்டமானுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. அன்றிலிருந்தே இருவருக்குமிடையில் முரண்பாடுகள் வெடிக்க ஆரம்பித்தன.

எனினும், 1954 ஆம் ஆண்டு அட்டனில் நடைபெற்ற இலங்கை, இந்திய காங்கிரஸின் மாநாட்டின்போதுதான் முரண்பாடு சந்திக்கு வந்தது. தலைவராக இருந்த அஸீஸ், இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சி.வி. வேலுபிள்ளையை ஆதரித்தார். குமாரவேலுவுக்கு சார்பான தொண்டமான் அணி பிரசாரம் செய்தது.

ஒருகட்டத்தில் கட்சி – தொழிற்சங்கத்துக்குள் அஸீஸின் கையோ ஓங்கியிருந்தது. பின்னர் முரண்பாடு காரணமாக வெளியேறினார் அஸீஸ். இலங்கை ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் எனும் புதிய தொழிற்சங்கத்தையும் உருவாக்கினார். இ.தொ.காவுக்கு ஒரு காலத்தில் சிம்மசொப்பனமாக அவ்வமைப்பு விளங்கினாலும், இன்று பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

தொண்டமான் அணியிலிருந்த அமரர். வெள்ளையனும் கொள்கைரீதியிலான முரண்பாடு காரணமாக பிரிந்துசென்று, தொழிலாளர் தேசிய சங்கத்தை அமைத்தார். சி.வி. வேலுபிள்ளையும் அதில் இணைந்தார்.

முக்கிய புள்ளிகளின் வெளியேற்றத்தால் இ.தொ.கா. ஒரு கட்டத்தில் ஆட்டம் கண்டிருந்தாலும் தொண்டமான், இராஜலிங்கம் உட்பட மேலும் பல தலைவர்கள் புத்துயிர் கொடுத்தனர்.

மலையக மக்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுத்த பெருமை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸையே சாரும். எனினும், பஞ்சப்படி போராட்டம் உட்பட தொழிலாளர்களின் உரிமை சார் விடயங்களின்போது தொண்டமானின் வகிபாகம் தொழிலார்களுக்கு துரோகம் இழைக்கும் வகையிலேயே அமைந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஒருகாலகட்டத்தில் கொழும்பு, பதுளை, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இன்று இரண்டு எம்.பிக்களையே கொண்டுள்ளது.

மலையக மக்களுக்கான அரசியல் – தொழிற்சங்க அமைப்பாக உருவாக்கப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்குள் இன்று குடும்ப ஆதிக்கம் கோலோச்சியுள்ளது.

இன்று 80 வருட பூர்த்தியை கொண்டாடும் இவ்வேளையில், கட்சியின் முக்கிய பதவிகளை குடும்ப உறுப்பினர்களே வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஆர்.சனத்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435