கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் ஆம் திகதி காணாமல்போன மீனவர்கள் தற்போது, மியன்மார் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
குடாவெல்ல மீனவ இறங்குதுறையில் இருந்து ஆழ்கடல் இழுவைப் படகில் ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்காக கடலுக்கு சென்றிருந்தனர்.
அவர்களது இழுவை படகின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் கரையுடனான தொடர்பும் செயலிழந்த நிலையில் கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
மீனவர்களுடனான தொடர்புகள் அற்ற நிலையில், மீன்பிடி திணைக்களம் அயல் நாடுகளுக்கு காணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை பரிமாறியிருந்தது.
இந்த நிலையில், குறித்த இழுவை படகுடனான மீனவர்கள் மியன்மார் கடல் பிராந்தியத்தினுள் மீட்கப்பட்டுள்ளனர்.
மியன்மாரில் உள்ள இலங்கை மீனவர்களை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்பிடி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.