திட்டமிட்ட அடிப்படையில் இன்று பணிப்புறக்கணிப்பு – கல்விசார் அதிகாரிகள்

அரசியல் பழிவாங்கல் நோக்கத்தில் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் நியமனங்களை நிறுத்துமாறு கோரி, திட்டமிட்ட அடிப்படையில் இன்றைய தினம் (04) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியைப் பாதுகாப்பதற்கான தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்பன உள்ளிட்ட 11 சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளன.

சில ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், குறித்த பிரச்சினை தொடர்பில் இணைக்கப்பாடு ஏற்படவில்லை என்றும், இதனால், திட்டமிட்ட அடிப்படையில் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முறையற்ற அரசியல் நியமனங்களால் கல்வியை சீரழிக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் தமது அரசியல் நலனுக்காக கல்வியை சீரழிக்க முயலும் அரசியல்வாதிகளுக்கு எவரும் அஞ்சத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் விளக்கமளித்துள்ள அவர்,

கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் அமைச்சரவை அனுமதியினூடாக தகுதியற்ற அரசியல் நியமனங்கள் கல்வி நிர்வாக சேவைக்கும் ஆசிரிய கல்விச் சேவைக்கும் அதிபர் சேவைக்கும் உள்வாங்கப்படுகின்றமை இலங்கை கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

இதனால் சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு அமைய போட்டிப் பரீட்சைகளின் மூலம் தகுதியான ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களை சேவைகளில் உள்வாங்குவதற்கு இருக்கும் சந்தர்ப்பம் பலவருடங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் குறுக்கு வழியால் உட்புகும் தகுதியற்றவர்களால் தகுதியானவர்களின் பதவியுயர்வுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படவுள்ளதுடன், தகுதியானவர்கள் தகுதியற்றவர்களின் ஆணையின் கீழ் செயற்படும் அவமானங்களும் நடைபெறும்.

முறையற்ற நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம் ஆசிரிய சமூகத்திற்கும் இலங்கைக் கல்வித்துறைக்கும் கற்கவுள்ள எதிர்கால சந்ததிக்கும் பெரும் சவாலும் அவமானமுமே இதன் விளைவாகக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்.

அரசியல் இலாபம் தேடும் குறுகிய மனப்பான்மையில் முழுக் கல்வியையும் பணயம் வைத்து இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கும் இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவைக்கும், இலங்கை அதிபர் சேவைக்கும் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோரைப் பின்கதவால் நுழைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கின்றது.

இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டது.

முதலாவதாக மேற்படி நபர்களுக்கு பதவிவழங்காது வேதனம் மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பின்னர் நியமனங்களை வழங்கவுள்ளது. முன்னைய அரசாங்கமும் இவ்வாறு முயற்சித்தபோதும் அவற்றை முறியடிப்பதில் நாம் வெற்றிபெற்றோம்.

இலங்கை கல்வி நிர்வாகசேவை இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை இலங்கை அதிபர் சேவை என்பவற்றில் இணைந்துகொள்வதற்கு பொருத்தமான நடைமுறை ஒழுங்குகள் உள்ளன.

அந்த முறையான நடைமுறைகளுக்கு அமைய அச்சேவையில் உள்வாங்கப்படுவதற்கு எவ்வித அழுத்தங்களும் அரசால் கொடுக்கப்படுவதில்லை.

இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்துகொள்வதற்கு இவர்களுக்கு சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கமைய சந்தர்ப்பங்கள் உள்ளன.

இருந்தும் இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் உள்வாங்கப்படுவதானது முறையாக நியமனம் பெறமுன்வரும் ஆசிரியர்கள் அதிபர்கள் பட்டதாரிகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கிறது. இதனால் சேவையின் தரமும் புனிதமும் இல்லாது போய்விடும்.

இவ்வாறாக சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக வழங்கப்படும் முறையற்ற நியமனங்களால் இலங்கை கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எமது ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் வெளிப்படுத்த சகல ஆசிரிய அதிபர் கல்விச் சேவையாளர் சங்கங்களும் கல்வி நிர்வாகசேவை சங்கமும் இணைந்துள்ளன.

இதன்படி இன்று சகல பாடசாலைகள் வலயக்கல்விப் பணிமனைகள் மாகாணக்கல்வித் திணைக்களங்கள் கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிலையங்களிலும் சேவையாற்றும் ஆசிரியர்கள் அதிபர்கள் ஆசிரியகல்விச் சேவையாளர்கள் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க உள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435