தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை ஏன் வழங்க முடியாது?

இலங்கையின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக பாரிய வீழ்ச்சியை நோக்கி நகர்வதை நாட்டின் பொருளாதார அபிவிருத்திச் சுட்டியின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 2012ஆம் ஆண்டு 7.2வீதமாக இருந்த நாட்டின் பொருளாதரம் கடந்த 2014ஆம் ஆண்டில் 6.5வீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு அது 4.8 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆட்சியிலிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசியஅரசாங்கம் எடுத்திருந்த சில கடுமையான பொருளாதார நகர்வுகளால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க டொலருக்கு நிகரானரூபாவின் பெறுமதியும் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

தற்போது அமையப்பெற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சமகால பொருளாதார நெருக்கடிக்கு விடை கொடுப்பதாக அறிவித்துள்ள போதிலும், சர்வதேச பொருளாதார நிபுணர்களின் கருத்தின் பிரகாரம் இலங்கையின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளப்படுள்ளதென தெரிவிக்கின்றனர்.

சமகால பொருளாதார நெருக்கடியை இலங்கையில் மத்தியதர வர்க்கத்திற்கே ஈடுகொடுக்க முடியாத நிலையில், வறுமைக் கோட்டுக் கீழ் வாழும் மலையக சமூகம் எவ்வாறு ஈடுகொடுக்கும் என்ற கேள்வி உள்ளது.

இந்திய வம்சாவளி மக்கள் இனத்துவ அடிப்படையில் இந்த நாட்டில் நான்காவது நிலையில் கணிக்கப்படுகின்றனர். இவர்களின் பொருளாதாரமும் நான்காம் தரத்தில்தான் உள்ளது. பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து ஏனைய சமூகங்களை விட முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் மலையக மக்களின் பொருளாதாரம் காணப்படுகிறது. இவர்களின் வாழ்வாதாரம் தம்முடைய மாத சம்பளத்திலேயே தங்கியுள்ளது. பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியை முன்னிறுத்தி ஆரம்பித்த இந்த மக்களின் பொருளாதாரம் இன்று அந்தப் பயிர்களாலேயே வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மிக நீண்டகாலமாக தொழிற்சங்கள் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை நிலையை தீர்மானித்தும், பாதுகாத்தும் வந்துள்ளன – வருகின்றன. 1988ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இவர்களின் குடியுரிமை மீள வழங்கப்பட்டதன் பின்னரே அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களும், பார்வையும் இந்திய வம்சாவளி தமிழர்களின் பக்கம் திரும்பியதுடன், மக்கள் சார் நலனில் அக்கரையும் ஓரளவு செலுத்தப்பட்டது.

படிப்படியாகப் பெற்றுக்கொண்ட பிரதிநிதித்துவமும், பேரம் பேசும் தொழிற்சங்க சக்தியுமே இந்த மக்களை அரசின் பங்கு தாரர்களாகச் சேர்த்துக்கொள்ள வழிவகுத்தது. தொழிற்சங்கள் அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களை முன்னிறுத்தி பேரம் பேசும் சக்தியாக வலுவடைந்ததால் இவர்களின் பொருளாதார நலனில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதை பிரிக்க முடியாது.

1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையின் காரணமாக இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதித்துவங்கள் மாகாண, உள்ளூராட்சி மட்டத்தில் ஓரளவு கிடைக்கப் பெற்றதால் காலங்காலமாகத் தட்டிக்கழிக்கப்பட்டுவந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளில் கேள்வியெழுப்பட்டது.

1972முதல் 1992ஆம் ஆண்டுவரை பெருந்தோட்டங்கள் அரசுடமையின் கீழ் காணப்பட்டமையால் இவர்களின் பொருளாதார நலன்களில் அரசு ஓரளவு அக்கரைக் கொண்டிருந்தது. வாக்கு வங்கிக்காவது அரசாங்கம் அவ்வப்போது ஒருசில திட்டங்களை முன்னெடுத்தது. 1992ஆம் ஆண்டின் பின்னர் முழுமையாகத் தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களிடம் ஒப்படைக்கபட்டமையின் காரணமாக அரசு இவர்களின் நலன் தொடர்பில சிந்திக்கவில்லை. காரணம் அரசு வகித்த இடத்திற்குத் தொழிற்சங்கள் தலைமைத்தாங்க தொடங்கின.

இந்த நாட்டின் பொருளாதரத்தின் முதுகோடிகளாக உள்ள பெருந்தோட்ட மக்கள் குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பாரிய சிக்கல்களை இன்றளவும் சந்தித்து வருகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை தீர்மானிக்கும் தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் கடந்த 30ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்பதில் இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டுக் கமிட்டி ஆகிய மூன்று தொழிங்சங்களும் தெரிவித்து வருகின்றன.

ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி மலையகத்தில் நாளாந்தம் தொழிலாளர்களின் புரட்சி வெடித்த வண்ணம் உள்ளது. அத்துடன், மலைநாட்டு இளைஞர்கள் அணிதிரண்டு கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தியிருந்த போராட்டம் இலங்கை வரலாற்றையும், மலைநாட்டு வரலாற்றையும் புரட்டிப்போட்டுள்ளது.

1000 ரூபா ஒருநாள் சம்பளம் என்பது இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க கட்டாயமாக அவசியமாகும். அதற்காகவே இம்முறை வரலாற்றில் என்றுமில்லாதவாறு போராட்டங்கள் வெடித்துள்ளன. ஆனால், கம்பனிகள் 600 ரூபாவுக்குமேல் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க முடியாதென அறிவித

கடந்த வருடம் மாத்திரம் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் 22 கம்பனிகளுக்கும் மொத்தமாக 400 கோடி ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளன.

எனவே, இதில் புதைந்துள்ள மர்மங்கள் என்ன? என்று இன்றுவரை ஜீரணிக்க முடியாத ஒன்றாகவுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகளின் உண்மையான முகத்தை வெளிகாட்ட நீண்டகாலமாக பின்நிற்கின்றன. அதற்கு காரணம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும், கம்பனிகளுக்கும் இடையில் உள்ள சில இரகசிய தரகுகள்தான் எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் அதனைத் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுவதற்கு பிரதான காரணம் இதுவரை பரந்த வெளியில் பகிரங்க மேடையில் கூட்டு ஒப்பந்தப் பேச்சுகள் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறாமையே. மறுபுறத்தில் இந்தக் கூட்டு ஒப்பந்த விவகாரத்தில் அரசாங்கமும் நேரடி தலையீட்டை மேற்கொள்வதில்லை. ஒருநாட்டின் தொழில் வர்க்கமொன்றின் மீது அரசு கொண்டுள்ள அக்கறை இதுவா? எனப் பல சந்தரப்பங்களில் கேள்விகணைகள் தொடுக்கப்பட்டிருந்தாலும், வெறும் வாக்கு வேட்டையாக பயன்படுத்தப்படும் சமூகமாகவே மலைநாட்டு தொழிலாளர் வர்க்கம் இன்றளவும் உள்ளது.

தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டபோது வெறுமனே தோட்டக் கம்பனிகள் தொழிலாளர் நலன் சார்ந்து செயற்படுவதுபோல் காட்டிக்கொண்டன. மறுபக்கத்தில் ஒட்டுமொத்த வருமானத்தையும் ஆங்கிலேய காலனித்துவத்தில் போல் சுரண்டிக்கொண்டன- சுரண்டிக்கொண்டிருக்கின்றன.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த மக்களின் பங்கு கணிசமாக உள்ள நிலையிலும் இன்றுவரை இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்திக்கொள்ள போதுமான பொருளாதார சக்தியை அரசும் கொடுக்கவில்லை, கம்பனிகளும் கொடுக்கவில்லை. கம்பனிகள் பாரிய வருமானத்தைப் பெற்றபோது அதற்கு வழிகோலிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த எந்தவொரு ஏற்பாடும் செய்திருக்கவில்லை.

கூட்டு ஒப்பந்தத்தில் முறையான பொருளாதாரத் திட்டமிடல் இல்லாத பட்சத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தொழிலாளர்களின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் மாற்றுத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியது அவசியமானதாகும். தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டாலும் அதில் முறையான திட்டமிடலும், வழிக்காட்டலும் இருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.

தொழிசங்கங்கள் மக்களிடம் வாக்குப் பெறுவதும், தொழிலாளர்களிடம் சந்தா பணம் பெறுவதும், இரண்டு வருடத்திற்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதும் மாத்திரம்தான் தங்களின் வேலை என்று எண்ணியுள்ளன. அந்த எண்ணத்திலிருந்து அனைத்துத் தொழிற்சங்கங்களும் வெளிவர வேண்டும். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே பெருந்தோட்டங்களை மையப்படுத்தி உள்ளமையால் அதன்மூலம் அவர்கள் ஏனைய சமூகத்திற்கு இணையாக வருமானம் பெரும் வழியை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அரசினது தலைமைத்தும் இன்றியமையாததாகும்.

மொரிஸியஸ், மலேசியா போன்ற நாடுகளில் ஏனைய மக்களின் வாழ்வாதாரத்துக்கு இணையான வாழ்வாதாரத்தைத் தோட்டப் புறங்களில் ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட தொழிலாளர் வர்க்கம் பெறுகின்றது. அங்கு மட்டும் எவ்வாறு சாத்தியமாகியுள்ளது? அதற்கு முறையான திட்டமிடலுடன் கூடிய பொருளாதாரக் கட்டமைப்பே காரணம்.

எனவே, ஒரு முறையான பொருளாதாரத் திட்டமிடல் என்பது அனைத்து மட்டத்திலும் அவசியமாக உள்ளது. இன்னமும் 50வீதமான வறுமையானவர்கள் தோட்டப்புறங்களிலேயே வாழ்கின்றனர். ஒரு தரப்பு மாத்திரம் அல்ல கம்பனிகள், தொழிற்சங்கங்கள், அரசு ஆகிய மூன்று தரப்பும் இணைந்து தொழிலாளர்களுக்கு நியாயமான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும். அப்போதுதான் காலங்காலமாக தொடரும் இந்தப் சம்பளப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும்.\

எனவே, இது குறித்து தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனங்களும், அரசாங்கம் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இழுபறியில் நீக்கும் இந்த சம்பள பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்க வேண்டும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435