மே மாதச் சம்பளத்தை வழங்க முடியாது – ஜோசப் ஸ்ராலின்

கோவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து- இலங்கை அரசு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிப்பதற்கு எனக் கூறி – குறைந்த ஊதியங்கள் பெறும் அரச ஊழியர்களிடம் அவர்களின் மே மாதச் சம்பளத்தை அரசாங்கம் கேட்பது முறையற்றது என்று – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் –

கடன்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகள் போன்ற – கடுமையான நிதிச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களின் ஏப்ரல் மற்றும் மே மாதக் கடன் தவணைகளை செலுத்த வேண்டாம் என்ற முடிவு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தம் கூட – அந்த சலுகை – ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பாக – ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட பல அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பண்டிகைக் கால முற்பணங்களும் பலருக்குக் கிடைக்கவில்லை.

அதிகமான வெளிநாட்டு உதவிகள் தற்போது அரசுக்கு கிடைப்பதுடன் – கச்சாய் எண்ணையின் விலை குறைவாகக் கிடைக்கும் தற்போதைய நிலையிலும் கூட இந்த அரசு எரிபொருள் விலைகளைக் குறைக்காமல் – அதிக விலைக்கே விற்றுவருகின்றது. இதுபோன்ற நிலையில் – ஜனாதிபதியின் செயலாளரின், அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தைக் கோரும் கோரிக்கை நியாயமற்றதாகும். இதற்கு எவரும் அடிபணியத் தேவையில்லை.

ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தரா – 2020 மே 5 திகதியிட்ட ஒரு கடிதத்தின் மூலம், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களும் – தங்கள் சம்பளத்தை அரசாங்க செலவினங்களுக்காக – நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதமானது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ளது. அதில் “நான் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கிறேன். நீங்களும் உங்கள் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஊக்குவிப்புக்கள் – அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவதிலேயே எப்படி அமைந்திருந்தது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் நன்கு அறிவோம். பலர் – அதிகாரிகளின் அழுத்தங்களுக்குப் பயந்து தமது சம்பளத்தை வழங்கும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. இது அரச ஊழியர்களை பாதிப்படையச் செய்யும் அநீதியான செயற்பாடாகும்.

அதுமட்டுமல்லாமல் – இதற்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை – தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு முறைகேடாகவும் – ஜனாதிபதியின் செயலாளர் பயன்படுத்தியுள்ளார்.

கோவிட் 19 நோய்த்தொற்றைக் காரணமாக காட்டி – அனைத்து அரசு ஊழியர்களின் மே சம்பளத்தை நன்கொடையாகக் கோரிநிற்கும் – அரசின் இத்தகைய முறையற்ற கோரிக்கையானது – ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் போராட்டம் – தபால், ரயில்வே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிற பொது சேவைகளின் சம்பள போராட்டங்கள் – எதிர்காலங்களில் தோன்றுவதைத் தடுப்பதற்கான அரசின் தந்திரோபாயமா? என்பதே நமக்கு முன்னுள்ள கேள்வியாகும்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கான ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையானது – கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அதிபர், ஆசிரியர்-களின் சம்பள உயர்வு போராட்டத்தைக் கூடப் பாதித்துள்ளது.

வெளிநாட்டு உதவிகள் தாராளமாகப் பெறப்பட்டு – எரிபொருள் மூலமும் இலாபமீட்டிக்கொண்டு – அரச ஊழியர்களின் சம்பளத்தை – அரசு கோரிநிற்பதானது – “நிதி நெருக்கடி” என்று பாசாங்கு செய்வதான அரசாங்கத்தின் முயற்சி என்றே எமக்கு வலுவான சந்தேகம் எழுகின்றது. அதுமட்டுமல்லாமல் – தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் – இ;வ்வாறு பெறப்படும் நிதிகள் – தனிப்பட்ட நபர்களின் பைகளை நிரப்பும் அபாயகரமான சூழலும் உள்ளது.

உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் – ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தை நியாயப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதனை அரச ஊழியர்களின் அன்பளிப்பு எனவும் கூறியிருக்கிறார். இதே உயர்கல்வி அமைச்சர் தான் – ஒரு குடும்பம் வாழ்வதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா (2500/-) போதுமானது எனவும் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்தவராவார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

இவர்களின் – இந்தக்கோரிக்கை மிகவும் அநீதியானது என்பதுடன் – இதன்மூலம் அரச நிறுவனங்களின் தலைவர்கள் – ஊழியர்களின் ஊதியங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஜனாதிபதியின் செயலாளரும் அத்தகைய அழுத்தங்களை மறைமுகமாக ஊக்குவித்துள்ளார் என்பதையும் நாம் அறிவோம். இதனை இலங்கை அசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் – இத்தகைய அழுத்தங்களுக்கு – அதிபர், ஆசிரியர்கள் அடிபணியத்தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435