வடக்கில் நிலவும் பல வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை

வட மாகாணத்தில் பல வெற்றிடங்களை நிலவுகின்றபோதும், அவற்றை நிரப்புவதற்கு அவசியமான தகைமை உடையவர்கள் இல்லை என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர்,

வட மாகாணத்தில் மொத்தம் 6338 வெற்றிடங்கள் இருப்பதாகத் தெரியவருகின்றது. அவற்றுள் மத்திய அரசினால் நிரப்பப்பட வேண்டிய வெற்றிடங்கள் 3329. மாகாண அரசினால் நிரப்பப்பட வேண்டியவை 3009.

பதவி வெற்றிடங்கள் என்பது ஒரு நிலை. வேலைவாய்ப்பற்றவர்கள் என்பது பிறிதொரு நிலை. இரண்டையும் சேர்த்து எம்மைக் குறை கூறாதீர்கள். அதாவது குறிப்பிட்ட பதவி வெற்றிடங்களுக்கு வேலைவாய்ப்பற்றவர்கள் தகைமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு வாகன சாரதி வெற்றிடம் ஒன்று இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். ஐம்பது பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வேலையின்றி இருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐம்பது பேருக்கும் சாரதி தேர்ச்சிப் பத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது? பதவி வெற்றிடமாக இருக்கும்; ஐம்பது பேரும் வேலையற்றிருப்பார்கள். ஆகவே வேலையற்றிருப்போர் யாவரும் எமக்கிருக்கும் பதவி வெற்றிடங்களை நிரப்பத் தகைமை பெற்றவர்கள் என்று நினைத்து எம்மைக் குறை கூறுவது முறையாகாது.

பல வெற்றிடங்களை நிரப்பத் தோதான தகைமை உடையவர்கள் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.

இது கல்வித் தேர்ச்சியில் உயர் நிலை அடைந்தவர்களுக்கும் பொருந்தும்; கல்வி நிலையில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும். பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வி பெற்று உயர் நிலையை அடையும் எம்முட் பலர் வெளிநாடுகளுக்குச் செல்வது உங்களுக்குத் தெரியும். அவர்களால் நிரப்பக்கூடிய வெற்றிடங்களும் எமது வெற்றிடப் பட்டியலில் இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இல்லாததால் குறிப்பிட்ட வெற்றிடங்களை நிரப்ப முடியாதிருக்கின்றது.

அதே போல் தொழிற்கல்வி கற்று சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைகள் தேடிச் செல்வதால் இங்கு ஏற்படும் வெற்றிடங்கள் பல தொடர்ந்து நிரப்பப்படாது இருப்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

தொழில்த் திறன் உள்ளவர்கள் இல்லாததால் வடமாகாணம் படும் அவஸ்தையை நீங்கள் உணர வேண்டும். தாதிகளுக்கு வெற்றிடம் உண்டு.

தகுந்த தமிழில் பேசும் தாதிகள் இல்லாததால் நாம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து தாதியரை அழைத்து வந்து வெற்றிடங்களை நிரப்புகின்றோம். நிரப்பிய பின்னரும் வெற்றிடங்கள் பல உண்டு. நீங்கள் கூறும் வேலையற்றவர்களை நாம் தாதியர்களாக நியமிக்கலாமா? அவர்களுக்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் தகைமை இருக்க வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வடக்கு மாகாணசபை அநீதி இழைத்துள்ளதா அல்லது வடக்கு மாகாணசபைக்குத் தமிழ் இளைஞர் யுவதிகள் அநீதி இழைத்துள்ளார்களா?

இலகுப் பாடங்களைப் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் பலர் வேலைவாய்ப்பின்றி இருப்பது அவர்கள் எமது வெற்றிடங்கள் பலவற்றை நிரப்பத் தகுதி இல்லாததன் காரணத்தால். இதனால்த்தான் எமது தேவைகளுக்கு ஏற்பவும் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று கூறி வருகின்றோம். – என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435