கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2ஆம் முனையம் பற்றிய அறிவித்தல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை 2023ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் 2017ஆம் ஆண்டு நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது. நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் திட்டத்தின் பல பகுதிகள் தற்காலத்திற்கு பொருத்தமற்றது என துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2023ஆம் ஆண்டுக்கு பொருத்தமான வகையில் அனைத்து தொழிநுட்ப வசதிகளுடனும் வினைத்திரன் மிக்க விமான நிலைய முனையமாக (Smart Terminal) அதனை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விமான சேவைகள் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

கொவிட் நோய்த்தொற்றுடன் சர்வதேச விமான சேவைகள் முடங்கியதன் காரணமாக விமான சேவைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பான நிலைமைகளுக்கு மத்தியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

விமான நிலைய பணிகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சூழலைப் பயன்படுத்தி இரவு பகலாக நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு விரைவாக நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

இரண்டாவது முனைய நிர்மாணப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதும் வருடமொன்றுக்கு 15மில்லியன்களுக்கும் அதிகமான விமானப் பயணிகளுக்கு சேவைகளை வழங்க முடியும். இந்த நிர்மாணப் பணிகளைத் தொடர்ந்து உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் முனையங்கள் இரண்டு பகுதிகளாக செயற்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். ஈ-கேட் வசதிகளின் ஊடாக பயணிகளுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதனுடன் இணைந்ததாக வாகனத் தரிப்பிடமும் விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்படும்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் டீ.வீ. சானக, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

மொஹான் கருணாரத்ன

பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு.

2020.10.01

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435