பட்டதாரிகளுக்கு சுற்றுலாத்துறையில் வேலைவாய்ப்பு

போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளை ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஏனையோரை சுற்றுலாத்துறைக்கு வருமாறும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரச துறைகளில் வேலைவாய்ப்புக் கோரி கிழக்கு மாகாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வரும் பட்டதாரிகளை சமீபத்தில் வழங்கப்படவிருக்கும் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும், ஏனையோரை கவர்ச்சிகரமான ஊதியம் பெறும் சுற்றுலாத்துறைக்கு வருமாறும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கிழக்கில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்லொன்றில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக பட்டதாரிகளின் விடயம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தற்போது அதற்குத் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாகாண சபைக்கு அதற்குரிய நிதி விடுவிப்புக்கான கூட்டம் ஒரு சில நாட்களில் இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் கிழக்கில் இளைஞர் யுவதிகள் முகங்கொடுக்கும் வேலையில்லாப் பிரச்சினைகளைப் பற்றி எமது கவனத்திற்கு விரிவாக எடுத்துரைத்துள்ளார்.

முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல ஆசிரிய மற்றும் அதிபர் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சான தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர். பாஸ்கரலிங்கத்தின் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, தேசிய கல்வி அமைச்சின் செயலாளர், ஆளுநர் செயலாளர், தலைமை செயலாளர், மாகாண கல்வியமைச்சின் செயலாளர், மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண வளங்களைப் பயன்படுத்தி கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகள் சுற்றுலாத்துறையில் கவர்ச்சிகரமான வருமானம் ஈட்டிக் கொள்ளும் தொழில் வாய்ப்புக்களைப் பெற முடியும். அதுபற்றியும் நீங்கள் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435